பல சேவை சார்ந்த நிறுவனங்கள் இந்திய கிராம மற்றும் புறநகர் பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப சேவைகளை மற்றும் நவீன மக்கள் தொடர்பு சாதனங்களை அறிமுகப்படுத்தி புரட்சியையும் மலர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றன.
ஹைதராபாத்தில் உள்ள மேனேஜ் எனப்படும் தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை பயிலகம் நாட்டில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கிராமங்கள், பஞ்சாயத்துக்கள் என மாவட்ட வாரியாக இந்த நிறுவனம் தகவல் மையங்களை அமைத்து மாவட்ட மக்களுக்கு தேவையான இணைய தளங்களை ஏற்படுத்தி அவற்றை பயன்படுத்த பயிற்சியும் அளித்து வருகிறது.
இணையத்தை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பங்கள் மூலமாக பல்வேறு தட்ப வெப்பநிலைகளில், பல கடினமான பகுதிகளில் வாழும் விவசாய மக்களுக்கு தேவையான தகவல்களை அளிக்க முடியும் என்பதால் அரசும் பல சேவை நிறுவனங்களும் இணைந்து கிராம மக்களுக்கு தொழில்நுட்ப அறிவை ஊட்ட செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் கிராம மக்களிடையே தகவல் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகள் விரைவாக பெருகி வருகிறது. இது போன்ற விரைவான நடவடிக்கைகளால் இணையம் இந்தியாவின் பெரும்பான்மையான மாவட்டங்களை சென்றடைந்துள்ளது. இந்த சேவைகள் தற்போது கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துக்கள் அளவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கிராம மக்களும் மிகுந்த ஆர்வமுடன் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக இப்பணிகளில் ஈடுபட்டு உள்ள சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேனேஜ் அமைப்பு 7 மாநிலங்களில் உள்ள 24 மாவட்டங்களில் தேசிய விவசாய தொழில்நுட்ப திட்டம் என்கிற பெயரில் இணைய இணைப்புகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கணிப்பொறிகள் இயக்குவதற்கான பயிற்சிகள் மற்றும் இணையம் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளையும் இந்த அமைப்பு கிராம மக்களுக்கு வழங்கி வருகிறது. கிராம மக்கள் பயன்படுத்த கூடிய அளவில் மிக எளிமையான பயன்பாட்டு மென்பொருள்களையும் நிறுவி பயிற்சி அளித்து வருகிறது.
கிராம மக்கள் இந்த நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக தாங்கள் மிகுந்த பயன் அடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர். வானிலை அறிக்கைகள், அருகில் உள்ள நகர சந்தை விலைகள், வேலைவாய்ப்பு விபரங்கள், செய்திகள் என பல முக்கிய விபரங்களை பெற முடிவதாகவும், சந்தை நிலவரங்கள் தெரிவதால் வியாபாரிகள் மூலம் ஏமாற்றப்படுவது தடுக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேனேஜ் அமைப்பு 28 மாவட்டங்களில் இணைய வசதியை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இந்த அமைப்பு கிராம மக்களுக்கு உதவும் வகையில் இரண்டு கால்சென்டர்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் மதுரை அருகில் மேலூரை சுற்றி உள்ள கிராமங்களுக்கு DHAN அமைப்பு சார்பில் இணைய மையங்கள் ஏற்படுத்தபட்டு கிராம மக்களுக்கு தேவையான விபரங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. கிராம மக்கள் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற பலவற்றை இணையம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கிராமங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இணைய மையங்களில் வந்து மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியாளருக்கு புகார் கடிதங்களை மின்னஞ்சல் வழியே அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
தகவல் தொழில்நுட்பங்கள் கிராம மக்களின் தொலைதொடர்புக்கு மட்டுமின்றி தொழில் வாய்ப்பையும் அமைத்து கொடுக்கும் வகையில் அமையும் என்றால் விவசாய மக்களுக்கு வளமான எதிர்காலம் அமையும் என்பதில் என்ன சந்தேகம்?